புதுடெல்லி,
நாடு முழுவதும் வருகிற 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசுகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் நேரடியாக தடுப்பூசி வாங்கிக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதித்து உள்ளது. இதற்காக தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கொரோனா தடுப்பூசி கொள்கை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம் மே 25-ந்தேதி வரை தயாரிக்கும் தடுப்பூசி அனைத்தும் மத்திய அரசுக்கே கொடுக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும், எனவே அதுவரை மாநிலங்களால் தடுப்பூசி வாங்க முடியாது என்றும் சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதை மத்திய அரசு மறுத்து உள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனக்கூறியுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநிலங்கள் தடுப்பூசி வாங்கிக்கொள்ளலாம் எனவும் உறுதிபட தெரிவித்து இருக்கிறது.