புதுடெல்லி,
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிர் இழந்தனர். இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இறுதி தீர்ப்பு கூறப்படும் வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்காலமாக அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
இந்த மனு மீதான விசாரணையின் போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறி உள்ளது.