தேசிய செய்திகள்

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பயிற்சி மாணவரின் அறையில் இருந்து கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேயில் தேசிய பாதுகாப்பு அகாடமி உள்ளது. இங்கு ராணுவம், விமானப்படை, கடற்படை வேலைக்கு தேர்வானவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. உத்தரபிரேதச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அந்தரிக்ஸ் குமார் சிங் (வயது18). இவர் கடந்த ஜூலை மாதம் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியில் சேர்ந்தார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகன் ஆவார். நேற்று காலை 6 மணியளவில் உடன் பயிற்சி பெறும் மாணவர்கள் அந்தரிக்ஸ் குமார் சிங்கின் அறைக்கு சென்றனர். அப்போது அவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்தரிக்ஸ் குமார் சிங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். சம்பவம் குறித்து உத்தம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், பயிற்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.

எனினும் பயிற்சி மாணவரின் அறையில் இருந்து கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. பயிற்சி மாணவர் தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் புனே தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவரின் மரணம் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.