தேசிய செய்திகள்

சென்னைக்கு சுப்ரீம் கோர்ட்டு கிளை வருகிறது; மத்திய அரசு கெஜட்டில் வெளியீடு

தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றின் வழக்குகள் இந்த கிளையில் விசாரிக்கப்படும்.

புதுடெல்லி

நாட்டில் நீதி வழங்கும் அதிகாரம் படைத்த உச்சபட்ச அமைப்பாக சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தேங்கியுள்ள அதிக வழக்குகளை விரைவில் தீர்க்கவும், செலவுகளை குறைக்கவும் மற்றும் நீதிக்கான அணுகலை அதிகரிக்க செய்யும் நோக்கிலும் கூடுதலாக சுப்ரீம் கோர்ட்டு கிளைகளை உருவாக்க முடிவாகி உள்ளது. இது தொடர்பான தகவலை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டு உள்ளது.

இதன்படி, புதுடெல்லியில் அரசியல் சாசன அமர்வு ஒன்று செயல்படும். இது தவிர்த்து வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் 4 நிரந்தர மண்டல கிளைகள் உருவாக்கப்படும். அவை முறையே புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நாட்டின் முக்கிய 4 நகரங்களில் அமையும்.

இதில், புதுடெல்லியில் உள்ள அரசியல் சாசன அமர்வானது, அரசியல் சாசன முக்கியத்துவம் கொண்ட வழக்குகளை மட்டும் விசாரிக்கும். எந்தெந்த வழக்குகள் அரசியல் சாசன முக்கியத்துவம் கொண்ட வழக்குகள் என்று முடிவு செய்யும் தனிப்பட்ட அதிகாரம் இந்திய தலைமை நீதிபதிக்கு இருக்கும்.

இதன்படி, இந்த அரசியல் சாசன முக்கியத்துவம் கொண்ட வழக்குகளை, புதுடெல்லியில் உள்ள அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும். அது தவிர்த்த பிற வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டின் முழு நீதிமன்ற அதிகாரத்துடன் பிற 4 நிரந்தர மண்டல கிளைகள் விசாரணை மேற்கொள்ளும். இதன்படி, தெற்கு மண்டலத்திற்கான சுப்ரீம் கோர்ட்டின் கிளை சென்னையில் வருகிறது.

அந்த அமர்வில், அரசியல் சாசன அமர்வுக்கான வழக்குகளை தவிர்த்து, பிற வழக்குகள் விசாரிக்கப்படும். இதில், தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றின் வழக்குகள் விசாரிக்கப்படும்.

SCROLL FOR NEXT