புதுடெல்லி,
பிரபல தனியார் கட்டுமான நிறுவனம் யுனிடெக் ஆகும். இந்த கட்டுமான நிறுவனத்தில் வீடு வாங்குவதற்கு பணம் செலுத்தியவர்களுக்கு, வாக்குறுதிப்படி வீடுகள் கட்டி தரப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கில், அந்த கட்டுமான நிறுவனத்தார் தங்களுக்கு ஸ்ரீபெரும்புதூர், ஆக்ரா, வாரணாசி ஆகிய நகரங்களில் வில்லங்கம் இல்லாத 600 ஏக்கருக்கும் மேற்பட்ட சொத்துகள் இருப்பதாக பட்டியல் அளித்தனர்.
இந்த சொத்துகளை ஏலத்தில் விற்று, வீடு வாங்க பணம் செலுத்தியவர்களுக்கு திருப்பித் தருவதற்காக டெல்லி ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.என். டிங்கரா தலைமையில் 3 உறுப்பினர் குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது.
இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, யுனிடெக் நிறுவனத்தாரின் ஆக்ரா சொத்துகளை 4 வாரத்திலும், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாரணாசி சொத்துகளை 6 வாரத்திலும் ஏலத்தில் விற்று முடிக்க எஸ்.என். டிங்கரா குழுவுக்கு உத்தரவிட்டது.