புதுடெல்லி,
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கியது. எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து முன்பு 6.41 கோடி என்றளவில் இருந்த வாக்காளர் எண்ணிக்கை 5.44 கோடி என்றளவில் குறைந்தது.
இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 39 ஆயிரத்து 278 பேர் உள்பட மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது.
நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் என்ற கணக்கில் வரும் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. அதற்கான கால அவகாசத்தை நாளை வரை (30-ந்தேதி) அளித்துள்ளது. கடந்த 27-ந்தேதி வரை 16 லட்சத்து 2 ஆயிரத்து 555 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர். பெயர் நீக்க 1 லட்சத்து 3 ஆயிரத்து 115 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையுடன் அவகாசம் நிறைவடையும் நிலையில், மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கில், தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உத்தரவிட்டுள்ளது.