புதுடெல்லி,
டெல்லியை சேர்ந்த வக்கீல்கள் விஷால் தாக்ரே, அபய் சிங் யாதவ், பிரணவேஷ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், லவ் ஜிகாத் என்ற பெயரில் நடைபெறும் மத மாற்றங்களுக்கு எதிராக உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அரசியல் சாசன அமைப்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளன. மத மறுப்பு திருமணங்கள் செய்வோருக்கு எதிராக பொய் வழக்குகள் பதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த சட்டங்களை அமல்படுத்தினால் சமூகத்தில் குழப்பங்கள் உருவாகும். எனவே, இதுபோன்ற சட்டங்களை அமலாக்குவதை மாநிலங்களுக்கு தடைவிதிக்க வேண்டும். மேற்கண்ட சட்டங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.
மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள் லவ் ஜிகாத் என்ற பெயரில் நடைபெறும் மத மாற்றங்களுக்கு எதிராக உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். இருப்பினும் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.