தேசிய செய்திகள்

புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு

புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த திட்டம் 2023ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்காக குஜராத் மாநிலத்தில் 8 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். வல்சாத் மாவட்டம் வகல்தாரா என்ற கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்த நில அளவீடு பணிக்காக அதிகாரிகள் சென்றனர். ஆனால் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் சாரோன் கிராமம் உள்ளிட்ட பல இடங்களில் நில அளவீடு பணிக்கு வந்த அதிகாரிகளை பணி செய்ய விடாமல் விவசாயிகள் தடுத்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நிலம் கையகப்படுத்துவது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. மேலும் குஜராத் மாநில சட்டப்படி, வளமான நிலத்துக்கு குறைவான நஷ்டஈடு தந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசின் சட்டப்படி நிலம் கையகப்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT