புதுடெல்லி,
காஷ்மீரில் சிறுமி உத்தரபிரதேசத்தில் 18 வயது இளம்பெண் ஆகியோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தி தேசிய மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் டெல்லி ராஜ்காட்டில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். பெண்களின் உரிமைக்காக தனது இறுதி மூச்சுவரை போராடுவேன் என அப்போது அவர் கூறினார்.
இந்தநிலையில், 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், 12 வயதிற்கு மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. குழந்தைகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்,
இதை தொடர்ந்து டெல்லி ராஜ்காட்டில் 10 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வந்த ஸ்வாதி மாலிவால் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
இது குறித்து ஸ்வாதி மாலிவால் செய்தியார்களிடம் கூறியதாவது:
முதலில் தனி ஒருத்தியாக போராட்டத்தை ஆரம்பித்தேன். பின்னர் நாடு முழுவதிலும் இருந்து மக்களின் ஆதரவு கிடைத்தது. இது மக்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
இவ்வாறு அவர் கூறினார்.