புதுடெல்லி,
கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு புதிதாக தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலில் ஆந்திராவில் தெலுங்கு தேசம்பா.ஜனதா கூட்டணி வென்றது. சந்திரபாபு நாயுடு முதல்மந்திரி ஆனார். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா
ராஷ்டிர சமிதி ஆட்சியை கைப்பற்றியது.
ஆந்திரா பிரிக்கப்பட்டபோது செழிப்பான ஐதராபாத் நகரம் தெலுங்கானாவுக்கு சென்றுவிட்டது. மேலும் புதிய தலைநகரை (அமராவதி) உருவாக்கவேண்டிய நெருக்கடியும் ஆந்திராவுக்கு ஏற்பட்டது. இதனால் அப்போதைய தேர்தல் பிரசாரத்தின்போது, நாங்கள் வெற்றி பெற்றால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்போம் என்ற வாக்குறுதி அந்த கூட்டணியின் சார்பில் அளிக்கப்பட்டது.
மத்திய மந்திரிசபையில் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூவும் (விமான போக்குவரத்து), ஒய்.எஸ்.சவுத்ரியும் (தகவல் தொழில்நுட்பம்) இடம் பெற்று உள்ளனர்.4 ஆண்டுகள் ஆகியும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக பா.ஜனதா தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தெலுங்கு தேசம் அதிருப்தி அடைந்தது.
இதனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு நேற்று இரவு விஜயவாடா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், மத்திய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் அசோக் கஜபதி ராஜூவும், ஒய்.எஸ்.சவுத்ரியும் வியாழக்கிழமை (இன்று) தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று அறிவித்தார்.
இதன்படி, தெலுங்கு தேசம் கட்சியைச்சேர்ந்த மத்திய மந்திரிகள் இருவரும், தங்கள் ராஜினமா கடிதத்தை பிரதமர் மோடியை சந்தித்து கொடுப்பதற்காக, அவரை சந்திக்க பிரதமர் அலுவலகத்தில் நேரம் கேட்டுள்ளனர். பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் மாநில பயண மேற்கொள்ள உள்ளதால், மந்திரிகளுக்கு இன்று அனுமதி கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை.