திருச்சூர்,
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேரளாவிற்கு 3 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் திருவனந்தபுரத்திற்கு நேற்று வந்து சேர்ந்துள்ளார். கேரள சட்டசபையின் வைரவிழா கொண்டாட்டங்களின் முடிவாக இன்று சட்டசபை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றை அவர் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து கொச்சி நகரில் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுடன் நாளை காலை உணவு சாப்பிடுகிறார். அதன்பின்னர் புகழ் பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலுக்கு நாளை மறுநாள் செல்கிறார். அதனை முடித்து கொண்டு அவர் டெல்லிக்கு திரும்புகிறார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர், குடியரசு தலைவர் நாளை பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் புனித தாமஸ் கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதனை தொடர்ந்து அந்நபரின் மொபைல் எண்ணை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் சிரகால் பகவதி கோவிலின் பூசாரியான ஜெயராமன் என்றும் அவர் தொலைபேசியில் பேசியபொழுது குடிபோதையில் இருந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.