புதுடெல்லி,
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தி.மு.க. மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணைக்குழுவை நியமித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதன்படி ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட உறையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கை முடிக்க அனுமதி கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் வழக்கின் புலன் விசாரணையை முடித்து, 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த நவம்பர் 8-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.