தேசிய செய்திகள்

வாலிபர் மதவெறி கும்பலால் கடத்திக் கொலை ;அரியானா மாநிலத்தில் பதற்றம்

அரியானா மாநிலத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் மதவெறி கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகார்

அரியானாவின் நுஹ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பதற்றம் நிலவி வருகிறது. நூஹ் மாவட்டம் கெடா கலில்பூரை சேர்ந்த முஸ்லிம் வாலிபர் ஆசிப் கான் உடற்பயிற்சிக் கூடத்தின் பயிற்சியாளர். இவர் நண்பர்களுடன் தனது வீட்டில் இருந்து சோன்ஹாவுக்கு மருந்துகள் வாங்க காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த 15 பேர் கொண்ட கும்பல் அவரின் காரை நிறுத்தி அவர்களை கடத்தியுள்ளது. மேலும், ஜெய்ஸ்ரீ ராம் என்று கூறச்சொல்லி அவர்களை அடித்துள்ளனர். இதில், ஆசிப் கான் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது நண்பர்கள் இருவர் ராஷித், வாசிப் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதவெறி கும்பல், காரை நிறுத்தி காரில் மேல் கற்களை எறிந்துள்ளனர். இதில் நண்பர்கள் இருவரும் தப்பித்து ஓடவே, ஆசிப் கான் மட்டும் அவர்களிடம் சிக்கியதாகவும் மேலும் ஆசிப்புக்கும் அங்குள்ள இந்து மத கும்பலுக்கும் முன்விரோதம் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது வரை இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது இந்து-முஸ்லிம் மோதல் இல்லை என்று நுஹ் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர சிங் கூறி உள்ளார்.

இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில இடங்களில் போராட்டம் நடைபெற்றது அவர்களை கலைக்க போலீசார் காற்றில் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது. பாதிக்கப்பட்டவரின் இறுதிச் சடங்கில் நேற்று கலந்து கொண்டவர்களில் பலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.