பீகாரில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என தீவிரவாத ஒழிப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, ரெயில் நிலையம் அருகே விடுதிக்கு அடுத்துள்ள மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் 2 பேரை கைது செய்தனர்.
இதன்பின் போலீசாரின் விசாரணையில் அவர்கள் இருவரும், வங்காளதேச நாட்டை சேர்ந்த கைருல் மண்டல் மற்றும் அபு சுல்தான் என தெரிய வந்தது. அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அவர்களிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் போஸ்டர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் இருந்தன.
இதனுடன் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின் ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய படைகளை குவிப்பதற்கான உத்தரவுகள் அடங்கிய புகைப்பட நகல்களும் இருந்துள்ளன. இதன்பின் அவர்கள் இருவரும் தீவிரவாத ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். பின்னர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 3 மொபைல் போன்கள், 2 போலி வாக்காளர் அடையாள அட்டைகள், போலி பான் அட்டை, ரெயில்வே டிக்கெட்டுகள் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இந்தியாவிற்குள் சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றி நுழைந்து பின்னர் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
வங்காளதேச ஜமியாத் உல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் முஸ்லிம் இளைஞர்களை சேர செய்வதற்கான பணிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.