புதுடெல்லி,
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக சி.பி.ஐ.யும், சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த டெல்லி தனிக்கோர்ட்டு முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும், சி.பி.ஐ.யும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட சுவான் டெலிகாம் நிறுவனர் ஆசிப் பல்வா உள்ளிட்ட சிலர் டெல்லியில் 500 மரங்களை நட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மரங்கள் நடுவதற்கும், பதில் மனு தாக்கல் செய்யவும் அவகாசம் வேண்டும் என ஆசிப் பல்வா உள்ளிட்டோர் தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 24-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.