தேசிய செய்திகள்

ராகுல்காந்தி பிரசாரத்தில் பலூன் வெடித்த சம்பவம்: மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவு

ராகுல்காந்தி பிரசாரத்தின் போது, பலூன் வெடித்து தீ பற்றிய சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில் திறந்த வேனில் சென்றவாறு சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, சாலையோரம் அவரை வரவேற்பதற்காக கட்சி தொண்டர் ஒருவர் வைத்திருந்த ஹீலியம் நிரப்பிய பலூன்கள், இன்னொரு தொண்டர் வைத்திருந்த ஆரத்தி தீயில் உரசியது. இதில் பலூன்கள் வெடித்துச் சிதறி தீப்பிழம்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை.

என்றபோதிலும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்கும் தேசிய தலைவர் ஒருவருடைய பிரசாரத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இதுபற்றி விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி இந்த சம்பவம் பற்றி விசாரிக்க மத்திய பாதுகாப்பு அமைப்பு ஒரு குழுவை நியமிக்கும். அந்த குழு, இது சம்பவம் எப்படி நடந்தது?... இதன் பின்னணியில் இருந்தது யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையாக அளிக்கும்.

SCROLL FOR NEXT