புதுடெல்லி,
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட டிக்டாக் என்னும் செயலி இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களாலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், பல்வேறு வகையிலும் பொதுமக்களுக்கு தீமையை விளைவித்து வரும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, டிக்டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றும், டிக்டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
மேலும் இந்த வழக்கை வரும் 24-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் அப்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.
மதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக டிக் டாக் செயலியின் இந்திய நிறுவனமான பைடிடன்ஸ் (இந்தியா) டெக்னாலஜி லிமிடெட் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இந்த வழக்கு மதுரை கோர்ட்டில் வருகிற 24-ந் தேதியன்று நாளை விசாரணைக்கு வருவதாக கேள்விப்பட்டோம். டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை பற்றி விசாரித்து அன்று மதுரை ஐகோர்ட்டு இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இல்லையேல் இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால தடை நீக்கப்பட்டதாக கருதப்படும் என்று உத்தரவிட்டு உள்ளனர்.