புதுடெல்லி,
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், தனியார் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், இதனால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், அப்போதைய மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான, ராஜா, அந்த கட்சியின் எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த, டெல்லி, சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரமில்லை என கூறி, அனைவரையும் விடுதலை செய்து, 2017 டிசம்பரில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் 2ஜி வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை செப்.21க்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரும் வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.