தேசிய செய்திகள்

நிருபரை தாக்கிய சம்பவம்: நடிகர் சல்மான்கான் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு

இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த ஏப்ரல் மாதம் மும்பை பாந்திரா பகுதியில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு காரில் சென்று கொண்டிருந்த டி.வி. நிருபர் ஒருவர் சல்மான்கானை தனது செல்போனில் படம் பிடித்தார்.

மும்பை,

சல்மான்கானின் மெய்காவலர்கள் 2 பேர் இதை பார்த்து கோபம் அடைந்து, டி.வி. நிருபரை அடித்து உள்ளனர். சல்மான்கானும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த நிருபர் போலீசில் புகார் கொடுத்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர், சல்மான்கான் மற்றும் அவரது மெய்க்காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அந்தேரி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதன் மீதான விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில், டி.வி. நிருபரை தாக்கிய நடிகர் சல்மான்கான், அவரது மெய்காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி டி.என். நகர் போலீஸ் நிலையத்துக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.

மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி அக்டோபர் 14-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.