தேசிய செய்திகள்

புதுச்சேரியில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி

புதுச்சேரியில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.

புதுச்சேரி,

30 இடங்களை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6ந்தேதி நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில், தொடக்கத்தில் இருந்தே அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இரவு 10 மணி நிலவரப்படி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதனுடன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. 3 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. 3ல் முன்னிலை பெற்றுள்ளது.

புதுச்சேரியில் மற்றொரு கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தி.மு.க. 3 இடங்களில் வெற்றியும், 3 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களை கைப்பற்றி உள்ளது.

இதனால், போதிய இடங்களை கைப்பற்றியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.