தேசிய செய்திகள்

இந்திய கடற்படைக்கு புதிய நீர்மூழ்கி போர்க்கப்பல் ‘கரஞ்ச்’; மும்பையில் சோதனை ஓட்டம் தொடங்கியது

இந்திய கடற்படையில் சேர உள்ள புதிய நீர்மூழ்கி போர்க்கப்பல் ‘கரஞ்ச்’ சோதனை ஓட்டம் மும்பையில் தொடங்கியது. #mumbai

மும்பை,

இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நேவல் குரூப் நிறுவனத்துடன் 6 புதிய நீர்மூழ்கி கப்பல் (ஸ்கார்பீன் ரகம்) வாங்குவதற்கு 2005ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

அந்த நிறுவனம், மும்பை மஜ்காவ் கப்பல் கட்டும் தளத்தில் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கி வருகிறது.

அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பரில் முதலாவது ஸ்கார்பீன் ரக நீர் மூழ்கி போர்க்கப்பல் ஐ.என்.எஸ். கல்வாரி கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடி கடற்படைக்கு அர்ப்பணித்தார். இரண்டாவதாக, ஐ.என்.எஸ்.காந்தாரி நீர்மூழ்கி போர்க் கப்பல் வெள்ளோட்ட சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த கப்பல் விரைவில் கடற்படையில் இணைக்கப்படுகிறது.

இந்த நிலையில், மூன்றாவதாக அதிநவீன வசதிகளுடன் ஸ்கார்பீன் ரக கரஞ்ச் நீர்மூழ்கி போர்க்கப்பல் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த நீர்மூழ்கி போர்க்கப்பலின் சோதனை ஓட்ட தொடக்க விழா நேற்று மும்பை மஜ்காவ் கடற்படை தளத்தில் நடைபெற்றது. கடற்படை தளபதி சுனில் லன்பாவின் மனைவி ரீனா லன்பா தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கடற்படை தளபதி சுனில் லன்பா பேசுகையில், இந்த நீர்மூழ்கி போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்படுவதற்கு முன்பாக ஓராண்டு காலம் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று கூறினார்.

ஏற்கனவே, கரஞ்ச் என்ற பெயரில் மற்றொரு நீர்மூழ்கி போர்க்கப்பல் கடற்படையில் 34 ஆண்டுகள் சேவை புரிந்ததை நினைவுகூர்ந்த அவர், கடந்த 1971ம் ஆண்டில் இந்தியாபாகிஸ்தான் போரின்போது, அந்த நீர்மூழ்கி கப்பல் ஆற்றிய உன்னத சேவையையும் நினைவுகூர்ந்தார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் வேலா, வகீர் மற்றும் வக்ஷீர் ஆகிய 3 நீர்மூழ்கி போர்க் கப்பல்களும் விரைவில் தொடங்கி வைக்கப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்படும் என்றும், சராசரியாக 9 மாதத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு கப்பலும் தொடங்கி வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.