புதுடெல்லி,
டெல்லியில் சைபர் குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று அதிகாலை 12.50 மணியளவில் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து செயல்பட கூடிய பேஸ்புக் அலுவலக முகவரியுடன் வந்த மெயிலில், டெல்லியில் வசிக்கும் நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனவும் அவரை காப்பாற்றும்படியும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால், பேஸ்புக் கணக்கு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்பின் பாலம் வில்லேஜ் காவல் நிலைய அதிகாரிகளுக்கு, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான தகவல்கள் பகிரப்பட்டன.
இதனை தொடர்ந்து டெல்லி போலீசிடம், தற்கொலைக்கு முயன்ற நபரின் இருப்பிடம், அவரது பேஸ்புக் லைவ் வீடியோ பதிவு ஆகியவையும் பகிரப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து அவசரகால பொறுப்பு வாகனங்கள் உள்ளிட்டவை உடனடியாக சம்பவ பகுதிக்கு புறப்பட்டன.
இதன்பின் போலீசார், அந்நபரின் முகவரி உள்ள இருப்பிடத்திற்கு சென்றனர். அந்த நபர், அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தீவிர சிகிச்சைக்கு பின்பு அந்த நபர் காப்பாற்றப்பட்டு உள்ளார்.