தேசிய செய்திகள்

போலீஸ் வேலைக்கு வந்தவர்களின் மார்பில் சாதி பெயர்: ராகுல்காந்தி கண்டனம்

மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. இளைஞர்களின் மார்பில் ஸ்கெட்ச் பேனாவால் அவர்களது சாதி பெயர் எழுதப்பட்டு இருந்தது.

புதுடெல்லி,

இதில் மருத்துவ சோதனைக்கு வந்த இளைஞர்களின் மார்பில் ஸ்கெட்ச் பேனாவால் அவர்களது சாதி பெயர் எழுதப்பட்டு இருந்தது. எஸ்.சி. என்றும், எஸ்.டி. என்றும் பொதுப்பிரிவினருக்கு ஜி என்றும் எழுதப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த புகைப்படங்களை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜனதா அரசின் இந்த சாதிய அணுகுமுறை நாட்டின் இதயத்தை கத்தியால் கிழித்துள்ளது. நாட்டின் அரசியல் சாசனத்தை தாக்கியுள்ளனர். இது பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். எண்ணம். நாம் இந்த எண்ணத்தை தோற்கடிப்போம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி, தலித் மக்கள் மீதான அன்பை செலுத்துவதற்கு பா.ஜனதா அரசின் புதிய கண்டுபிடிப்பு இது. இந்த சம்பவம் பற்றி பிரதமர் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் வாய் திறக்காதது ஏன்? இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நாட்டில் எங்கும் நிகழாமல் இருக்க மத்திய அரசு கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.