புதுடெல்லி,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் அமைந்துள்ள ஜனதா தளம் (எஸ்)-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவில், கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவுக்கு பதிலாக, குமாரசாமி தலைமையில் ஜனதா தளம் (எஸ்)-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்து இருப்பது இயல்பாகவே மக்களின் விருப்பத்துக்கு மாறானது என்று கூறப்பட்டு உள்ளது. அத்துடன் தேர்தல் முடிவு வெளியான பின்னர் ஆட்சி அமைப்பதற்காக கட்சிகள் கூட்டணி சேருவதை அங்கீகரிக்கவோ, அத்தகைய கூட்டணி ஆட்சி அமைக்கவோ அனுமதிக்கக்கூடாது என்றும், எனவே இதுதொடர்பாக சட்டம் இயற்றுமாறு உத்தரவிடவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மனுதாரரின் வக்கீல் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக்குமார் கோயல், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை கால அமர்வு முன்பு ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.