தேசிய செய்திகள்

உ.பியில் வாஸ்கோடகாமா - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் வாஸ்கோடகாமா - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

லக்னோ,

கோவாவில் உள்ள வாஸ்கோடகாமா நகரில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு செல்லும் வாஸ்கோடகாமா-பாட்னா விரைவு ரயில் இன்று அதிகாலை 4.18 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பண்டா என்ற இடத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன. அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தின் போது தூங்கி கொண்டு இருந்த மக்கள் கடும் பீதியில் உறைந்தனர்.

இந்த விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதமே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT