லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து லக்னோவுக்கு இன்று அதிகாலை அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ்சில் 31 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், எக்ஸ்பிரஸ் சாலையில் உன்னாவ் மாவட்டம் காஹர் புர்வா கிராம் அருகே சென்றபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் பயணிகள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பஸ் டிரைவர் தூங்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.