புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அமைதியாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், அறிவியல் அறிவுரைகளை புறக்கணித்து மூட நம்பிக்கைகளுக்கு பணத்தை செலவழித்தீர்கள். ஆஸ்பத்திரிகளுக்கு பதிலாக உங்களுக்கு அரண்மனை கட்டிக்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். பெருந்தொற்று குறித்த அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்தீர்கள். இந்த 2-வது அலையில் தேர்தல் கூட்டங்கள் மற்றும் பெரும் பரவலுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகளுக்கு மக்களை ஒன்றிணைத்தீர்கள். ஆக்சிஜன் நிர்வாகத்தில் தவறிவிட்டீர்கள். வெளிநாட்டு உதவிகளை குடோன்களிலேயே வைத்திருந்தீர்கள். போதுமான அளவு தடுப்பூசிகளை வாங்கவில்லை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
கொரோனாவின் 2-வது அலை பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இந்த நேரத்தில் தீவிரமாக செயல்படுவதற்கு பதிலாக தங்கள் அமைதியான பயன்முறைக்கு பின்னால் பிரதமரும், உள்துறை மந்திரியும் ஒளித்திருப்பதாக கூறியுள்ள யெச்சூரி, அதற்கான நேரம் இதுவல்ல எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.