தேசிய செய்திகள்

மேற்கு வங்காள சுதந்திரப் போராட்ட வீராங்கனையை அசாமை சேர்ந்தவர் என்பதா? மோடி மீது திரிணாமுல் பாய்ச்சல்

பிரதமர் மோடி நேற்று தனது சுதந்திர தின உரையின்போது, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனை மந்தாகினி ஹசராவை அசாமை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டதாகவும், இது அவரது வரலாற்று அறியாமையை காட்டுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் குணால் கோஷ் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடிக்கு வரலாறு தெரியாது. எழுதிக்கொடுக்கப்பட்ட உரையை அவர் வாசித்துள்ளார். இது மேற்கு வங்காளத்துக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு. இதற்காக பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் மோடி உரையின் வீடியோவையும் அவர் இணைத்துள்ளார்.

இதுதொடர்பாக மேற்கு வங்காள பா.ஜ.க. அளித்துள்ள விளக்கத்தில், பிரதமரின் சிறு தவறை திரிணாமுல் காங்கிரஸ் பெரிதுபடுத்துகிறது. மம்தா பானர்ஜி கடந்த காலங்களில் இதுபோன்று பல தகவல்களை தவறாக கூறியுள்ளார். அதற்காக அவர் எப்போதாவது மன்னிப்பு கேட்டுள்ளாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.