தேசிய செய்திகள்

"இந்திய அமெரிக்க வர்த்தகம் இனி மென்மேலும் பூத்துக் குலுங்கும்"- உள்துறை மந்திரி அமித்ஷா

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கு பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று இறுதி செய்யப்பட்டு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். இதற்கு இந்திய தரப்பில் இருந்து பெரும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதற்கு பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்து உள்ளார் என்றும் ரஷியாவுக்கு பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அறிவித்துள்ள டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வலிமையாக உள்ளது என்றும் கூறினார்.

இந்நிலையில், இது தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், "இந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த வர்த்தக ஒப்பத்தத்துக்காக பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு வாழ்த்துக்கள். இரு நாட்டு மக்களுக்கும் இது நன்மை தரும். இந்திய அமெரிக்க வர்த்தகம் இனி மென்மேலும் பூத்துக் குலுங்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.