தேசிய செய்திகள்

மின்வெட்டால் டார்ச் லைட் அடித்து பிரசவம் பார்த்த அவலம் - ஆந்திராவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

ஆந்திராவில் மின்வெட்டால் டார்ச் லைட் அடித்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்த அவலம் அரங்கேறி உள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாநிலம் நர்சிப்பட்டிணம் கிராமத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு உள் நோயாளிகளாக 20 க்கும் மேற்பட்டவர்களும், பிரசவ வார்டுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த பகுதியில் திடீரென மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது. அப்போது பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரும் பழுதானதால், வேறு வழியின்றி டார்ச் லைட் மூலம் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

மின்சாரம் இல்லாமல் டார்ச் லைட் மூலம் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு உள்ளது.