புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 70 நாட்களாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இதையடுத்து கடந்த மாதம் 26-ஆம் தேதி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் கடந்த 29-ஆம் தேதி முதல் 2-ஆம் தேதி வரை இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
இந்த சூழலில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க பாடகி ரிஹானா உள்ளிட்ட பிரபலங்களுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதில், வேளாண் சட்டங்கள் இந்திய நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதத்துக்கு பிறகே நிறைவேற்றப்பட்டன என்று கூறியிருந்தது.
இந்தநிலையில், இதை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இந்திய நாடாளுமன்றம் முழுமையான விவாதத்துக்கு பிறகே வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியதாக வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது. இது, கேலிக்கூத்தான வகையில் உண்மையை திரித்துக் கூறுவது ஆகும். முழுமையான விவாதம் நடக்கவில்லை என்பதை மாநிலங்களவை பதிவுகளும், வீடியோ பதிவுகளுமே காட்டும். சில எம்.பி.க்களின் மைக்குகளுக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டது, பகுதிவாரியான ஓட்டெடுப்பு நடத்தும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வீடியோ பதிவுகள் இருக்கும் விஷயத்திலேயே வெளியுறவு அமைச்சகம் உண்மையை திரித்து கூறினால், அதன் மற்ற அறிக்கைகளை யார் நம்புவார்கள்? என்று பதிவிட்டுள்ளர்.