கொல்கத்தா,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ் (வயது 41). கிருஷ்ணகஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அவர் நாடியா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நடந்த சரஸ்வதி பூஜையில் கலந்து கொண்டார். அப்போது அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் முகுல் ராய் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முகுல் ராய், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாகவும், மன்மோகன் சிங் மந்திரி சபையில் ரெயில்வே இணை மந்திரியாகவும் இருந்தவர். மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட மோதலால் அக்கட்சியில் இருந்து விலகி 2017-ம் ஆண்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து முகுல் ராய் கூறுகையில், அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.