பெங்களூரு,
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. பெங்களூரு சிறையில் சசிகலா சிறை விதிகளை மீறியதாக கடந்த சில வாரங்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையில், அதிமுக அணிகளின் இணைப்புக்காக 60 நாட்கள் ஒதுங்கியிருப்பதாக அறிவித்து இருந்த தினகரன், இந்த காலக்கெடு முடிவடைந்து விட்டதாகவும் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இதனால், அ.தி.மு.க. அம்மா அணியில் தற்போது உச்சக்கட்ட மோதல் வலுத்துள்ளது. அ.தி.மு.க. அம்மா அணிக்கு யார்? தலைமையேற்று நடத்துவது என்பது தொடர்பாக முதல்அமைச்சரும், தலைமைநிலைய செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே வார்த்தைப்போர் வலுத்தது.
இத்தகைய பரபரப்பான சூழலில் அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவை சந்திக்க பெங்களூரு சிறைக்கு சென்றார். ஒன்றரை மணி நேர காத்திருப்புக்கு பிறகு டிடிவி தினகரனுக்கு சசிகலாவை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து, சசிகலாவை தினகரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.