புதுடெல்லி,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், தனது அணிக்கு டிடிவி தினகரன் பரிந்துரைத்த மூன்று பெயர்களில் ஏதாவது ஒரு பெயரை ஒதுக்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
அனைத்திந்திய அம்மா அண்ணா திமுக, எம்ஜிஆர் திமுக, எம்ஜிஆர் அம்மா திக ஆகிய பெயர்களை தினகரன் கோரியிருந்தார். இந்த மூன்று பெயர்களில் ஒரு பெயரை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மதுரையில் வருகிற 15-ந் தேதி, புதிய கட்சி பெயர் அறிவிப்பு விழா நடைபெறும், என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
இதற்கிடையில், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால், தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.