கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் புகழ் பெற்ற மந்தர்மணி பீச் உள்ளது. நாட்டில் மோட்டார் வாகனங்கள் செல்லும் வசதி கொண்ட ஒரே பீச் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இங்கு நடத்தப்படும் நீர் விளையாட்டு போட்டிகள், ஓட்டல்கள் மற்றும் கார்கள் ஓட்டி செல்வது என அனைத்தும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறும் வகையிலேயே உள்ளன.
இந்நிலையில், இரட்டையர்கள் இருவர் தங்களது இரு நண்பர்களுடன் இந்த பீச்சிற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இவர்களில் ஆர்காபிரபா சக்ரவர்த்தி பொறியியல் படிப்பும் மற்றும் அலோலிகா வங்காள இலக்கிய படிப்பும் ஜாதவ்பூர் பல்கலை கழகத்தில் படித்து வந்துள்ளனர்.
இருவரும் தங்களது சுற்றுலா செல்லும் திட்டத்தினை பெற்றோரிடம் கூறவில்லை. இந்த நிலையில், 4 பேரில் ஒரு இளம்பெண் தவிர்த்து மற்ற 3 பேரும் கடல் நீருக்குள் இறங்கி உள்ளனர். அவர்களை திடீரென வந்த அலை ஒன்று அடித்து சென்றுள்ளது. உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர்களில் இரட்டையர்கள் உயிரிழந்து விட்டனர்.
கடந்த 2017ம் ஆண்டு மே மாதத்தில் ஹவுராவை சேர்ந்த 2 இளைஞர்களும், 2016ம் ஆண்டு செப்டம்பரில் 3 ஐ.டி. நிறுவன ஊழியர்களும் அலையில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.
அதே ஆண்டு ஆகஸ்டில் 3 மாணவர்கள் காரில் வேகமுடன் சென்று மற்றொரு வாகனத்தில் மோதியதில் உயிரிழந்தனர். அதே ஆண்டு மே மாதத்தில் பீச்சில் காரில் சென்ற நபர் கார் கவிழ்ந்து பலியானார். இதனால் இந்த பீச் கடந்த சில வருடங்களாக அங்கு வருபவர்களுக்கு கொலைகார பீச்சாக உள்ளது.