ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் பட்ஹொடொலி கிராமத்தை சேர்ந்த சிறுமி சோனி குமாரி (வயது 16). இவரும் சுருஹு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 20) இளைஞரும் காதலித்து வந்தன. இதனிடையே, இருவரின் காதலுக்கும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த காதல் ஜோடி நேற்று முன் தினம் காலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர், கிராமத்திற்கு அருகே உள்ள குளத்திற்கு சென்ற காதல் ஜோடி அங்கு உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்வதற்குமுன் இருவரும் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்து செய்துள்ளனர்.
அந்த வீடியோவில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொள்வதாக கூறியுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
ரமேசின் செல்போன் சிக்னல் அடிப்படையில் குளத்துப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு ரமேசும் அவரின் காதலியான சிறுமி சோனி குமாரியும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இருவரின் உடலையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.