டெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடந்த 19ம் தேதி டெல்லி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.
அப்போது, 2 பயணிகள் கொண்டு வந்த பைகளை பரிசோதனை செய்ததில் 10 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப்பொருளை கடத்தி வந்த இந்தியாவை சேர்ந்த 2 பயணிகளை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.10 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.