தேசிய செய்திகள்

வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.60 ஆயிரம் கோடி ரிசர்வ் வங்கிக்கு மாற்றம்

உரிமை கோரப்படாத வைப்புத்தொகைக்கு சொந்தமான வாடிக்கையாளா்களை விரைந்து அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் கிடந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தற்போது இந்திய ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளில் இருந்து உரிமை கோரப்படாமல் இருந்த மொத்த வைப்புத்தொகை ரூ.60,518 கோடி அளவாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

2026, ஜனவரி இறுதி வரையிலான நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில் இருந்து ரிசா்வ் வங்கியின் வாடிக்கையாளா்கள் விழிப்புணா்வு நிதிக்கு மாற்றப்பட்ட உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.60,518 கோடியாகும். பிப்ரவரி இறுதி வரையிலான நிலவரப்படி, காப்பீடுதாரா்களால் உரிமை கோரப்படாத காப்பீட்டுத் தொகை ரூ.8,973.89 கோடி. இதேபோல், செபி ஒழுங்குமுறைகளின்கீழ், பரஸ்பர நிதியில் முதலீட்டாளா்களால் உரிமை கோரப்படாத தொகையின் மதிப்பு ரூ.3,749.34 கோடியாக உள்ளது. உரிமை கோரப்படாத வைப்புத்தொகைக்கு சொந்தமான வாடிக்கையாளா்களை விரைந்து அடையாளம் காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.