புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் காண்கிற வகையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. விழிப்புணர்வு பிரசாரம், தடுப்பூசி திட்டம் என பல உத்திகள் வகுத்து தொற்று பரவலை தடுக்க முயற்சித்தபோதும், எதற்கும் கட்டுப்படாமல் பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது
அந்தவகையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி பணிகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். இதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.