தேசிய செய்திகள்

யு.பி.எஸ்.சி புதிய தலைவர் பா.ஜ.கவுக்கு நெருக்கமானவர்; “யூனியன் பிரசாரக் சங்க கமிஷன்” என ராகுல் காந்தி விமர்சனம்!

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம், நாட்டின் அரசியலமைப்பு தகர்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (யு.பி.எஸ்.சி) தலைவரை நியமித்தது தொடர்பாக, மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

யு.பி.எஸ்.சி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் சோனி, ராஷ்திரிய ஸ்வயம் சேவா சங்க் மற்றும் பா.ஜனதா கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்று ஊடகங்களில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம், நாட்டின் அரசியலமைப்பு தகர்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

டுவிட்டரில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, யு.பி.எஸ்.சி என்பது யூனியன் பிரசாரக் சங்க கமிஷன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தகர்க்கப்படுகிறது, ஒவ்வொரு நேரத்திலும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு அமைப்பாக தகர்க்கப்படுகிறது என்று பொருள்படுமாறு பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இம்மாதம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி கூறுகையில், அரசியலமைப்பு ஒரு ஆயுதம். ஆனால் அமைப்புகள் இல்லாமல் அது அர்த்தமற்றது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.