காசியாபாத்,
உத்தரபிரதேச மாநிலம் காசியபாத்தில் ஒரு முஸ்லிம் நபரின் தாடியை அகற்றி, அவரை வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம் என்று கூறச்சொல்லி ஒரு கும்பல் தாக்குவதுபோல் டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியானது. அது போலியான வீடியோ என்று சொல்லி, அதை அகற்றுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால், டுவிட்டர் அகற்றவில்லை. தற்போது, சட்ட பாதுகாப்பை இழந்ததால், டுவிட்டர் நிறுவனம் மீது காசியாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். போலி வீடியோவை வெளியிட்டதாக இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், டுவிட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநருக்கு காசியாபாத் போலீசார் லீகல் நோட்டிஸ் விடுத்துள்ளனர். அதில், 7 நாட்களுக்குள் லோனி பார்டர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து தனது தரப்பு வாதத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ஏற்காததால், டுவிட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதையடுத்து, உத்தரபிரதேசத்தில் டுவிட்டருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.