தேசிய செய்திகள்

உ.பி. சட்டசபை தேர்தல்: கிருஷ்ணர் சிலையுடன் வேட்பு மனு தாக்கல் செய்த பெண்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கிருஷ்ணர் சிலையுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

லக்னோ,

403 இடங்களை கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தற்போது நடந்து வருகிறது.

இதில் பதான் மாவட்டத்துக்குட்பட்ட பதான் சாதர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிடும் ரஜ்னி சிங் பாகி (வயது 33) என்கிற பெண் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அவர் கிருஷ்ண பகவான் குழந்தை வடிவில் இருக்கும் சிலையை கையில் ஏந்தியவாறு வந்து தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் பத்திரிகையளார்களிடம் பேசுகையில் அவர் (கிருஷ்ண பகவான்) என் தேரோட்டி. மகாபாரதத்தில் கிருஷ்ணர், அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்து, பாண்டவர்கள் வெற்றி பெற்றது போல், சட்டசபை தேர்தலில் எனது வெற்றியை அவர் உறுதி செய்வார் என கூறினார்.