கொல்கத்தா,
உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். எனவே காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதே போன்று பீகார் மாநிலத்தில் உள்ள அரேரியா மக்களவை தொகுதிக்கும் ஜகனாபாத், பபுவா ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கோரக்பூர் புல்பூர் மக்களவை தொகுதிகளில் பாஜக பின்னடைவை சந்தித்தது. இதில், புல்புர் தொகுதியிலும் சமாஜ்வாடி வேட்பாளர் சுமார் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். கோரக்பூர் தொகுதியில், சமாஜ்வாடி வேட்பாளர் 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். பீகாரின் அராரியா மக்களவை தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளர் 21 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.
உத்தர பிரதேச மக்களவை இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பின்னடைவை சந்தித்து இருப்பது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, முடிவுக்கான ஆரம்பம் துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:- மிகச்சிறந்த வெற்றி. மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உத்தர பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் முடிவுக்கான ஆரம்பம் துவங்கிவிட்டதை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.