தேசிய செய்திகள்

அமித்ஷா பெயரை பயன்படுத்தி அரியானா மந்திரியிடம் ரூ.3 கோடி கேட்ட 2 பேர் கைது

அமித்ஷா பெயரை பயன்படுத்தி அரியானா மந்திரியிடம் ரூ.3 கோடி கேட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

அரியானா மாநிலத்தில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. - ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி அரசில் மின்துறை மந்திரியாக இருப்பவர் ரஞ்சித் சிங் சவுதாலா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசிய மர்மநபர், மத்திய மந்திரி அமித்ஷா வீட்டில் இருந்து பேசுவதாக கூறி, கட்சி வளர்ச்சிக்காக ரூ.3 கோடி கேட்டார். இதனால் சந்தேகம் அடைந்த மந்திரி சவுதாலா, இதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.

அவர்கள் விசாரணை நடத்தி டெல்லியில் உள்ள அரியானா பவனில் தங்கி இருந்த ஜக்தார் சிங், உப்கார் சிங் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் மந்திரிக்கு போன் செய்து பணம் கேட்டதை ஒப்புக்கொண்டனர். இருவரும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட செல்போன் செயலி மூலம் அமித்ஷா வீட்டு தொலைபேசி எண்ணை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்க முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.