லக்னோ,
நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பிரிவினர் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட உத்தரபிரதேச முடிவு செய்துள்ளது. எனவே இதற்காக தடுப்பூசி வாங்க வெளிநாட்டு நிறுவனங்களையும் நாட மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி பணிகளை வீரியமாக செயல்படுத்துவதற்காக வெளிநாட்டு டெண்டர்களை கோர மாநில அரசு முடிவு செய்துள்ளது. சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து தலா 50 லட்சம் டோஸ்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 4 முதல் 5 கோடி டோஸ்கள் வாங்குவதற்கு சர்வதேச டெண்டர் ஒன்றும் விடப்படும் என்று குறிப்பிட்டு உள்ளார்.