லக்னோ,
கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை உத்தரபிரதேச அரசு தொடங்க உள்ளது. இதனை மாநில பால்வள மேம்பாடு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை மந்திரி லக்ஷ்மி நாராயண் சவுத்ரி தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கு 515 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளதாகவும், இது நாட்டிலேயே முதல் முறை தொடங்கப்படுவதாக இருக்கும் என்றும் மந்திரி கூறினார். மதுராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "112 அவசர சேவை எண்ணைப் போலவே, இந்த புதிய சேவையானது தீவிர நோய்வாய்ப்பட்ட பசுக்களுக்கு விரைவான சிகிச்சை மேற்கொள்ள வழி வகுக்கும். ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் இரண்டு உதவியாளர்களுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸ் சேவையானது உதவி கோரிய 15 முதல் 20 நிமிடங்களுக்குள் வரும். டிசம்பரில் தொடங்கும் இந்த திட்டத்தின் கீழ், புகார்களைப் பெற லக்னோவில் கால் சென்டர் அமைக்கப்படும் என்று மந்திரி கூறினார்.
மேலும் இலவச உயர்தர விந்து மற்றும் கரு மாற்று தொழில்நுட்பம் வழங்கப்படுவதன் மூலம் மாநிலத்தின் கால்நடை இன மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என்று கூறிய அவர், கரு மாற்று தொழில்நுட்பம் மாநிலத்தில் ஒரு புரட்சியாக இருக்கும். ஏனெனில் இது மலட்டு மாடுகளை கூட அதிக பால் தரும் விலங்குகளாக மாற்றும் என்றும் மந்திரி கூறினார்.