தேசிய செய்திகள்

செம்படம்பர் 5-ந் தேதிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிற செப்டம்பர் 5-ந் தேதிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பாதிப்பு குறைந்துள்ள மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஆசிரியர்கள், ஊழியர்கள் இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாத நிலை தொடர்கிறது.

இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர்கள் தின கொண்டாட்டத்துக்கு முன்பாக அனைத்து பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார்.

அந்த பதிவில், இந்த மாதம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்துக்கு கூடுதலாக 2 கோடி தடுப்பூசிக்கும் அதிகமாக வழங்கப்படும். வருகிற செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பாக பள்ளிக்கூட ஆசிரியர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு முயற்சிக்குமாறு மாநிலங்களை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.