லக்னோ,
உத்தரபிரதேசம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜக தொண்டர்கள் வந்த கார் அணிவகுப்பு மோதியதில் விவசாயிகள் உயிரிழந்தனர். அதன்பின்னர் விவசாயிகளுக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆஷிஷ் மிஸ்ரா வேண்டுமென்றே திட்டமிட்டு விவசாயிகள் மீது காரை மோதச்செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயிகள் மீது மோதிய காரின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி. வருண் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோவை இணைத்து வருண் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், விவசாயிகள் மீது வாகனங்கள் வேண்டுமென்றே மோதும் வீடியோ யாரையும் கலங்க வைக்கும். இந்த வீடியோவை போலீசார் கணக்கில் கொள்ள வேண்டும். விவசாயிகள் மீது மோதிய கார்களின் உரிமையாளர்களையும், அந்த கார்களில் அமர்ந்து சென்றவர்களையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.