ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் அடிபட்லா கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இவரது மகள் வைஷாலி (24) பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். நேற்று அவர் வீட்டில் இருந்து கடத்தபட்டார்.
இது குறித்து அவரது தந்தை அளித்துள்ள புகாரில் சுமார் 100 இளைஞர்கள் தங்கள் வீட்டிற்குள் புகுந்து மகள் வைஷாலியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். மேலும் வீட்டை அடித்து சேதபடுத்தி உள்ளனர் என கூறி உள்ளார்.
இதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது அதில் குறைந்தது 40 பேர் ஒரு வீட்டினை சேதப்படுத்துவதையும், கார் கண்ணாடிகளை உடைப்பதையும், ஒரு நபரை வீட்டை விட்டு வெளியே இழுத்துச் செல்வதையும் காணமுடிகிறது.
நவீன் ரெட்டி என்ற நபர் தன் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததும் அவர் அந்த கும்பலை ஏவி பெண்ணை கடத்தியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்
போலீசார் பல மணி நேர நடவடிக்கைக்கு பின் வைஷாலி பத்திரமாக மீட்டனர்.
போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 18 பேரை கைது செய்துள்ளனர், ஆனால் முக்கிய குற்றவாளி நவீன் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
வைஷாலி நவீனை ஒரு பூப்பந்து மைதானத்தில் சந்தித்து உள்ளார். இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். வைஷாலிக்கு நவீன் கார் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.
நவீன் வைஷாலியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி உள்ளார். ஆனால் வைஷாலி அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து நவீன் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வைஷாலியை துன்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக வைஷாலி போலீசில் புகார் அளித்து உள்ளார்.
நேற்று, வைஷாலிக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நவீன் சுமார் 40 பேருடன் புகுந்து அவரை கடத்தி உள்ளனர்.