முர்ஷிதாபாத்
மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத் நகரில் ராம நவமியை முன்னிட்டு ஊர்வலம் ஒன்று நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டவர்களில் சிலர் திடீரென அப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் கடைகளை அடித்து, நொறுக்கி கலவரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்கள் கடைகளுக்குள் புகுந்து அவற்றை சூறையாடியதுடன், பொருட்களை கொள்ளையடித்தும் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து உள்ளூர் போலீசாருடன், மத்திய படைகளும் குவிக்கப்பட்டன. ஆயுதம் ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வன்முறை சம்பவம் பற்றி தாக்குதலுக்குள்ளான பகுதியை சேர்ந்த நசிமுதீன் ஷேக் கூறும்போது, என்னுடைய மாமாவின் கடையிது. ஊர்வலம் இந்த வழியே சென்றபோது, சில குண்டர்களும் அதில் கலந்து கொண்டனர். அவர்கள் கடைக்குள் புகுந்து வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை தாக்கினர். கடையில் இருந்த பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பினர். சி.சி.டி.வி. கேமராக்களையும் உடைத்து விட்டு தப்பி சென்று விட்டனர். கடையில் எதுவும் இல்லை என வருத்தத்துடன் கூறினார்.
இந்த வன்முறை மற்றும் கடைகள் சூறையாடல் தொடர்ச்சியாக, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நகரம் முழுவதும் 4 பேரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ ஒன்று கூட தடை விதிக்கப்படுகிறது. நகர் முழுவதும், தொடர்ந்து பதற்ற நிலை காணப்படுகிறது.